வார இறுதிகளில் வரும் நண்பர்களின் திருமணங்கள் கூடவே ஒரு பயனத்திட்டத்தையும் ஏற்படுத்த மறுப்பதில்லை. இரண்டு மாதங்களுக்கு முன், நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக செல்லும் பொருட்டு கோடியக்கரை செல்வது என முடிவு செய்தோம்.
தோழி ஒருவரின் வீடு கோடியக்கரையில் இருந்தமையால், திட்டமிடுவதற்கோ விசாரிப்பதற்கோ எங்களுக்கு பெரியதாய் ஏதும் இருக்கவில்லை. வேதாரண்யத்தில் தங்குவதற்கு விடுதி பதிவு செய்வதிலிருந்து, கோடியக்கரையை சுற்றுவதற்கு வாகன ஏற்பாடுவரை எந்த மெனக்கெடலும் எங்களுக்கு இருக்கவில்லை. தோழி எங்களுடன் வரவில்லை என்றாலும், அந்த உணர்வே ஏற்படாத வகையில் கோடியக்கரையில் அவருடைய அம்மாவும், சுற்றத்தாரும் காண்பித்த அக்கறையும் உதவியும் என்றும் ஒரு நெகிழ்ச்சியான நினைவாக தொடரும்.
வேதாரண்யத்திலிருந்து கோடியக்கரை வரையிலான பேருந்து பயணம், அதிகாலையின் தன்மையாலும், இடையிடை வரும் கிராமங்களும் வணபகுதியுமாக ஒரு வித மன அமைதியும் நினைவுகளையும் ஓடச் செய்து கொண்டிருந்தன. உப்பளங்களின் குவியல்கள் கோடியக்கரையின் வெண்கம்பள வரவேற்பாய் அமைய, இனிதே துவங்கியது அன்றைய நாள்.
இலங்கைக்கும் தமிழகத்திற்குமான கடல் இடைவெளி குறைவாக உள்ள இடங்களில் கோடியக்கரையும் ஒன்று.. இலங்கை தமிழர்களுக்கும் தமிழ்நாட்டு தமிழர்களுக்கு நீர்வழி பாலமாக பல ஆண்டுகள் வரலாறு நெடுக இருந்து வரும் நிலமிது. மீன்பிடிப்பு பற்றியும், இலங்கை இந்திய கடல் எல்லை நிலவரங்கள் குறித்தும் பல வகையான படிப்பினைகளை கொடுத்தது காலையில் கடலுக்குள் படகில் செல்லும்போது , படகை செலுத்தியவருடனான உரையாடல். மீன்பிடிப்பு காலத்தின் நிறைவு பகுதியில் சென்றமையால், கரைகள் சற்றே மனித பழக்கமற்று கழுகுகளின் கண்காணிப்பில் அமைதியே தனதாய் அலைகளினூடே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.
அடுத்ததாக, புதிய கலங்கரை விளக்கம்..புதிய கலங்கரை விளக்கமும் அதன் உயரத்தில் இருக்கும் காற்றும் பல கதைகளை பேச வைத்தன. கோடியக்கரையின் மீன்பிடி கதைகள் ஆரம்பமாய், கோடியக்கரை இராணுவ முகாம்கள் வரை உரையாடல்கள் நீண்டன. உயரங்களின் வழியே விரியும் பார்வைகளுக்கு வார்த்தைகள் என்றுமே முழுமை கொடுப்பதில்லை என்பதை மீண்டும் நிரூபித்தன அந்த நிமிடங்கள்.
கோடியக்கரைக்கும் பழைய கால கதைகளுக்கும், குறிப்புகளுக்கும் இடையேயுள்ள பிணைப்பு, ரயில்பாதை போன்றது., ராமர் இலங்கை செல்கையில் வந்த இடம் என்ற குறிப்பு தொடங்கி (ராமரின் வனவாசத்தின் பொழுது என்ன வயதென்று தெரியவில்லை, ஆனால் கோடியக்கரையில் ராமர் பாதம் என்று கூறப்படும் பாத தடங்கள் நிச்சயமாக ஒரு சிறு குழந்தையின் பாத அளவே இருந்தது என்பது ஒரு பதிலில்லா கேள்வி!?) , சோழப்படையின் இலங்கை இணைப்பிடமாக திகழ்ந்ததாக அறியப்படும் குறிப்பும், பொன்னியின் செல்வன் பூங்குழலி சுற்றித்திரிந்த காடுகளின் அடர்த்தியும் பல கதைகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றன..
வெயிலுக்கிதமான சர்பத்தும் குழகர் கோவிலும் மதிய உணவிற்கான இடைவெளியை நிரப்ப, தோழியின் வீட்டின் அன்பிலும் உணவிலும் நிறைந்தன உணர்வுகள். பயணங்கள் உணவுகள் இன்றி முழுமை பெறுவதேயில்லை அதுவும் பயணிக்கும் ஊருக்கே உரிய சில உணவுகள் பயணத்தை முழுமை பெறச்செய்கின்றன. அந்த வகையில் கோடியக்கரையில் புசித்த பால பழத்தை குட்டி சப்போட்டா என்றே கூற வேண்டும்.
மதிய உணவிற்கு பிறகு., சோழனின் கலங்கரை விளக்கத்தைத் தேடிச் சென்று, சுனாமியால் தகர்க்கப்பட்ட செங்கல் மிச்சங்களாக, காயல் நீருடனான நடையாக, சதுப்பு நிலங்களாக, பறவை கால்தடங்களாக, சிப்பிகளாக பல நினைவுகளை சேகரித்துகொண்டது மனது.
காயலுடனான நடையை தொடர்ந்து, கோடியக்கரை சரணாலயத்தில் கலைமான்களுடன் தொடர்ந்தது பயணம். வெயில் காலம் ஆனதினால் தண்ணீர் வற்றிப்போயிருக்க, மதிய வேளையில் மான்களை பார்ப்பது கடினம் என்ற தகவலுடன் சென்ற எங்களுக்கு, குறைவின்றி காட்சியளித்த கலைமான் கூட்டங்களும், பரந்தவெளியும் அழகான ஆச்சர்யங்கள்.
மொத்தத்தில், கோடியக்கரைக்கு என்றே உள்ள ஒருவித பன்முகத்தன்மை பல நினைவுகளையும், சிந்தனைகளையும், அனுபவங்களையும் நெடுநாட்களுக்கு தொடர்ந்து வரவைக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
#கோடியக்கரை – கதைகளும் வாழ்வும்
Pics Captured using Lenovo K6 Power.